வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை வெளியே வரும் -அண்ணாமலை


வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை வெளியே வரும் -அண்ணாமலை
x

வடமாநில தொழிலாளர் பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வரும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நான் இரட்டை வேடம் போடுவதாக, ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது தி.மு.க.வினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் தி.மு.க.விற்கு கைவந்த கலை.

முதல்-அமைச்சரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான், "வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்-அமைச்சர்?" என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரச்சினையை திசைதிருப்ப, இப்போது என் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். முதல்-அமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க தி.மு.க.வின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை.

பா.ஜ.க. மொழி திணிப்பு செய்வதாக, குற்ற பத்திரிக்கை வாசிக்கும் ஆர்.எஸ்.பாரதி, 1960-களில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, தி.மு.க. செய்யாத தமிழ் மொழி திணிப்பை, பள்ளிகளில் "தமிழை கட்டாய பாடம்" ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழி திணிப்பை செய்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி, தமிழ் மொழி திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

நல்லிணக்கம்-தேசப்பற்று

வெறுப்பையும், பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு. வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டன குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக தி.மு.க.வினர் இருபது வேடங்கள் கூடப்போடுவீர்கள். இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

காவல்துறை அதிகாரிகளுக்கும், தி.மு.க.வினருக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சி.பி.ஐ. தொடங்க வேண்டும். அடிக்கடி திருச்சிக்கு செல்லும் தமிழகத்தின் டி.ஜி.பி., திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழக காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும். நாட்டில் பிரிவினை இல்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story