தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார் -ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார் -ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x

தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியது மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியையும் அறவே புறக்கணித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி பிரிவினரின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க கோர்ட்டு சார்பில் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்க நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், இது சம்பந்தமாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. எந்த உணர்வுடன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதோ அந்த உணர்வையும், உருவத்தையும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறவே நிராகரித்து உள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார்? யார்? வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அளிக்க வேண்டியது அவரது தலையாய கடமையாகும். இதை சுப்ரீம் கோர்ட்டும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க. வேட்பாளராக பா.செந்தில் முருகன் தேர்தல் அதிகாரி முன்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அளித்துள்ள வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது மட்டுமல்ல, இன்னும் தேர்தல் அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்யாத கே.எஸ்.தென்னரசு பெயரை மட்டும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று அறிவித்து இருக்கிறார்.

உத்தரவுக்கு முரணானதாகும்

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது, முன்கூட்டியே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது. இது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அறவே மீறுவதாகும்.

வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக்கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவும் இல்லை. அப்படியிருக்க, இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தட்டிப் பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முரணானதாகும்.

எடப்பாடி பழனிசாமியின் முகவர்

வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது சுப்ரீம் கோர்ட்டே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது. இத்தகைய செயல் மூலம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியது மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியையும் அறவே புறக்கணித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி பிரிவினரின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுவதில் அர்த்தம் உண்டு.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல் உள்ளத்தோடு, நடுநிலைமை உணர்வுடன் வழங்கப்பட்டு இருந்தாலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதை செயல்படுத்திய முறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு முரணானது மட்டுமல்ல, நடுநிலை தவறி ஒருசாராரின் கைப்பாவையாகவே அவர் இயங்கி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

சட்டம் வெறுமனே செயல்படுத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கென உள்ள நெறிமுறையின்படி செயல்படுத்தப்பட வேண்டும். நெறிமுறை தவறி, ஒரு சாராருக்காக, ஒரு தலைப்பட்சமாக நடத்தப்படுவதை சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயலாக பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story