போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்


போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்
x

போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை குலைக்கும் வண்ணம், இன்னுமொரு போட்டித்தேர்வு மூலம் பணி நியமனம் செய்யும் அரசாணை எண் 149-ஐ அமல்படுத்த துடிக்கிறது தி.மு.க. அரசு.

ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதியன்று, தமிழக பா.ஜ.க. சார்பில் 'நீட் தேர்வுக்கு மறுப்பு ஆனால் டெட் தேர்வுக்கு விருப்பு' என்ற தலைப்பிட்ட அறிக்கையில், ஆசிரியர் பணி நியமனங்களில் தி.மு.க.வின் இரட்டை வேடம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, பள்ளி கல்வித்துறை கமிஷனர், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அரசாணை எண் 149-ஐ கடுமையாக எதிர்த்த தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதி எண் 177-ல், 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. வாக்களித்த மக்களுக்கு வழக்கம்போல துரோகத்தையே செய்ய முற்படுகிறது.

வருத்தம்

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்துக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த நிலையில், இன்னும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி என்பது, இளைஞர்களின் இத்தனை ஆண்டு கால காத்திருப்பையும், நம்பிக்கையையும் அடியோடு சீர்குலைக்கும் செயல் ஆகும்.

அது மட்டுமல்லாது, இந்த தகுதித்தேர்வானது பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணி நியமனம் இருக்குமா? அல்லது போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணி நியமனம் இருக்குமா? எதன்படி தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது?

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கான அடுத்த வாய்ப்பு என்ன? போட்டித்தேர்வு முடிவுகளின் தரவரிசை வெளிப்படையாக அறிவிக்கப்படுமா? அல்லது தி.மு.க. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் செய்வதற்காக இதைப் பயன்படுத்த நினைக்கிறதா? என்ற கேள்விகள் ஆசிரியர் தகுதிபெற்ற இளைஞர்கள் மத்தியில் பூதாகாரமாக எழுந்திருக்கின்றன. அரசு ஆசிரியர் பணிக்காக, தங்களின் இத்தனை ஆண்டு கால காத்திருப்பையும், போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் வீணடித்திருக்கிறது என்று வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ரத்து செய்யவேண்டும்

இன்னுமொரு போட்டித்தேர்வை நடத்தி தகுதிவாய்ந்த இளைஞர்களை வஞ்சிக்காமல், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும், போட்டித்தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு பணிகளுக்காக வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலையை களைய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story