பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீட்டிப்பு


பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீட்டிப்பு
x

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீட்டிப்பு

திருப்பூர்

தளி

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருகில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு பகுதியிலிருந்து ஓடி வந்து பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பல மாதங்களுக்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது. வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால், உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.

குளிக்க தடை நீட்டிப்பு

இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெற வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடிவாரப் பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவில், விநாயகர், சுப்பிரமணியர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

ஆனாலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது. இதனால் நேற்று அருவியில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் காலை 11 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story