நாகையில், 50-க்கும் மேற்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு


நாகையில், 50-க்கும் மேற்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 7:00 PM GMT (Updated: 15 Feb 2023 7:00 PM GMT)

நகராட்சிக்கு வரி செலுத்தாததால் 50-க்கும் மேற்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

நாகப்பட்டினம்

நகராட்சிக்கு வரி செலுத்தாததால் 50-க்கும் மேற்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

நகராட்சி வரி பாக்கி

நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, தெருவிளக்கு, பொது சுகாதார பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக நிலுவையில் உள்ள வரிபாக்கி தொகையை செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள், பாதாளசாக்கடை இணைப்புகள் பாரபட்சம் இன்றி துண்டிக்கப்படும். ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நகராட்சியால் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து ஒலி பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு வந்தது.

குடிநீர், சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு

இந்த நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில், பொறியாளர் விஜய் கார்த்திக் மேற்பார்வையில், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, காடம்பாடி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வரி செலுத்தாத 50-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்தனர். மேலும் வரிபாக்கி உள்ளவர்கள் உடனடியாக வரி கட்ட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

உரிய நடவடிக்கை

நாகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாளசாக்கடை கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றின் நிலுவை மற்றும் நடப்பு தொகையை முறையாக கட்ட வேண்டும். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story