கோவில் திருவிழாவுக்கு வந்தபோது பரிதாபம்:முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தொழிலாளி பலி


கோவில் திருவிழாவுக்கு வந்தபோது பரிதாபம்:முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 May 2023 6:45 PM GMT (Updated: 9 May 2023 6:46 PM GMT)

கோவில் திருவிழாவுக்கு வந்தபோது முல்லைப்பெரியாற்றறில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை ராயவேலூரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 33). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தனது உறவினர்களுடன் வீரபாண்டி கோவில் திருவிழாவுக்கு வந்தார். அப்போது அவர் அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றார். குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி அன்பரசனை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் ஆற்றில் மூழ்கிய அன்பரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story