அதிவேகமாக சென்ற தனியார் பஸ் டிரைவருக்கு அபராதம்
அதிவேகமாக சென்ற தனியார் பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக செல்லும் பஸ்களால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் சென்றது. இந்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி நேற்று சிதம்பரம் படித்துறை இறக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனியார் பஸ் ஒன்று அதிவேகமாக சென்றது. இதைபார்த்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, உடனடியாக பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை வலியுறுத்தினார். பின்னர் பஸ் நின்றதும், ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என கேட்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை எச்சரித்தார். மேலும் தனியார் பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கவும் அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிதம்பரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்செல்வன், தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் இதுபோன்று அதிவேகமாக பஸ்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி எச்சரித்தார்.