தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடக்கிறது: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு


தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடக்கிறது: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு
x

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

சென்னை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், 2 மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார்த் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார்த் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 10-ந்தேதி (நாளை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 30- வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்- 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story