ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற சிறைவாசிகளுக்கு பரிசு


ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற சிறைவாசிகளுக்கு பரிசு
x

ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் 55-வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற சிறைவாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்கள் பரிசு வழங்கும் விழா நேற்று கரூர் கிளைச்சிறையில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தலைவர் சங்கர் வரவேற்றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் தலைமை தாங்கி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்களை பரிசாக வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சிறைச்சாலை என்பது தண்டனைக்கான இடம் அல்ல, சீர்திருத்தம் செய்வதற்காகத்தான். ஒரு நீதிபதி அளிக்கும் தண்டனை என்பது விரும்பி எடுக்கும் முடிவு அல்ல. அது சமுதாயத்தின் நலனுக்கானது. உங்களுக்கு ஒருபோதும் பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. உங்கள் குடும்பத்தை நினைத்து பாருங்கள். இன்று நீங்கள் வரைந்த ஓவியத்தில் இருந்து தொடங்கும் மாற்றம் உங்களுக்கு தெளிவை தரட்டும். கல்லும், சிலையும் கற்கள் தான். ஒருசில அடிகள் வாங்கும் கல் படியாகிறது. உளி தாங்கும் கற்கள் சிலையாகிறது. இன்றுமுதல் புண்பட்ட உங்கள் மனம் பண்படட்டும். அன்பை விதைப்போம், நற்பண்பை வளர்ப்போம், என்றார். முடிவில் கரூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.


Next Story