பொதுமக்கள் தர்ணா போராட்டம்


பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை யூனியனுக்குட்பட்ட ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் நடைபாதையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாரியப்ப பாண்டியன் கூறியதாவது:-

பஞ்சாயத்து உறுப்பினரான நான் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறேன். எனது சமூக பணிகளை சீர்குலைக்கும் வகையில் மானூர் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். ஏற்கனவே என் மீது உள்ள வழக்குகளில் ஆர்.டி.ஓ. விடம் பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்கள் பகுதியில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த வாரம் மனு கொடுத்தேன். அதன் பின்னர் தான் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எனது போராட்டம் தொடரும், என கூறினார்.

இதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்


Next Story