குத்தாலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!


குத்தாலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!
x
தினத்தந்தி 4 Jun 2022 9:35 AM GMT (Updated: 4 Jun 2022 9:48 AM GMT)

குத்தாலம் அருகே குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் தென்நச்சினார்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 150- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று சில நாட்களுக்கு முன்பு முடிவுற்றது.

இதனையடுத்து தற்போது வரை தங்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் கும்பகோணம்-தரங்கம்பாடி பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகும்,100 நாள் வேலை சரிவர வழங்கவில்லை என்றும் தங்கள் கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாலையூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கும்பகோணம்-தரங்கம்பாடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story