நெல்லையில் பொதுமக்கள் சாலை மறியல்


நெல்லையில் பொதுமக்கள் சாலை மறியல்
x

கோவில் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை கண்டித்து நெல்லையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 லோடு ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

கோவில் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை கண்டித்து நெல்லையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 லோடு ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் இடம்

நெல்லை தெற்கு புறவழிச்சாலை மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பு பகுதியில் 20 சென்ட் இடம் உள்ளது. இதனை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

அதில் தங்கள் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறி இருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மறியல் போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சம்பந்தப்பட்ட இடத்தில் தனிநபர்கள் வேலி அமைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் தெற்கு புறவழிச்சாலையில் நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அது கோவிலுக்கு சொந்தமான இடம் என தெரியவந்தது.

வேலி அமைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உறுதி அளித்தார். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கண்ணாடி உடைப்பு

இதற்கிடையே மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடைத்தார்களா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் உடைத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story