ராமநாதபுரத்தில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு


ராமநாதபுரத்தில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு
x

ஆயுத பூஜையையொட்டி பூக்கள், பழங்கள் விலை உயர்ந்தது. மல்லிகை பூ 1 கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ராமநாதபுரம்


ஆயுத பூஜையையொட்டி பூக்கள், பழங்கள் விலை உயர்ந்தது. மல்லிகை பூ 1 கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆயுத பூஜை

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாளளடப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை தினத்தன்று தங்களது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொருட்களை வைத்து படையல் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் அரண்மனை சாலையில் வியாபாரம் செய்து வரும் பூ வியாபாரி சோதி ராஜன் கூறியதாவது:- மதுரை, நிலக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களில் இருந்துதான் ராமநாதபுரத்திற்கு பூக்கள் விற்பனைக்காக வருகிறது. தற்போது நவராத்திரி திருவிழா நடந்து வருவதாலும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி திருவிழாவையொட்டி அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விலை போன மல்லிகை பூ ரூ. 1200. சம்பங்கி ரூ100-லிருந்து ரூ.350-ம், அரளிப்பூ ரூ.150-லிருந்து 600-ம், பிச்சுப்பூ ரூ.400-ல் இருந்து ரூ.900-ம், ரோஜாப்பூ ரூ.100-லிருந்து ரூ.250. கோழி கொண்டை ரூ.70-லிருந்து ரூ.140, செண்டு பூ ரூ.40-லிருந்து ரூ.140 என பூக்களின் விலை உயர்ந்து உள்ளது.

பழங்கள்

பழ வியாபாரி முருகன் கூறியதாவது:- பழங்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை அமோகமாக இல்லை.ஆப்பிள் பழம் ரூ.100-லிருந்து ரூ.150, மாதுளை ரூ.100-ல் இருந்து ரூ.150, கொய்யா ரூ.50-லிருந்து ரூ.100, விளாம்பழம் ரூ.160, பேரிக்கா ரூ.150, சாத்துக்குடி ரூ.70, ஆரஞ்சு ரூ.100 என அனைத்து வகை பழங்களும் ஒரு கிலோ ரூ.20-லிருந்து 100 வரை விலை உயர்ந்துள்ளது.

பொரி வியாபாரி ராமச்சந்திரன்:- ஒரு லிட்டர் பொரிகடலை ரூ.80 ரூபாய், ஒரு லிட்டர் பொரி ரூ.10, ஒரு லிட்டர் அவல் ரூ.25 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை, பொரி, அவல் ஆகியவை சற்று விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு வியாபாரம் ஓரளவு பரவாயில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூக்கள், பழங்கள் விலை உயர்வாக இருந்தாலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பொருட்களை பூஜை செய்ய வீடுகளுக்கு வாங்கி சென்றனர். சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ராமநாதபுரம் சாலை தெரு, அரண்மனை சாலை, வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் பூஜை பொருட்கள் வாங்க குவிந்ததால் திருவிழா போல் காட்சி அளித்தது.


Related Tags :
Next Story