குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு மறுதேர்வு -அண்ணாமலை வலியுறுத்தல்


குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு மறுதேர்வு -அண்ணாமலை வலியுறுத்தல்
x

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு மறுதேர்வு நடத்த அரசு முன்வரவேண்டும் என்றும், குளறுபடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 25-ந் தேதி அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 முதன்மை தேர்வில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அன்று காலை நடைபெற்ற தமிழ் தகுதித்தாள் தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமாகியிருக்கிறது. பல மையங்களில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு ஏற்கனவே தாமதமாக ஆரம்பித்ததால், போட்டியாளர்கள், தங்கள் பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல், விடைத்தாளில் விடைகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

தேர்வு தாமதம்

பின்னர் மீண்டும் விடைத்தாள்களை வரிசை எண்படி மாற்றி வழங்கியிருக்கின்றனர். இந்தக் குளறுபடிகளிடையே, போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத் தாள்களில் ஏற்கனவே வினாக்களுக்கான பதில்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், அவற்றைத் திருத்த கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை எனவும் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், மீண்டும் தேர்வு தாமதமாகியிருக்கிறது. இதையடுத்து, மாலை நடந்த தேர்வும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவ தில்லை என்று போட்டியாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.

மறுதேர்வு

உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்து விட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக, அவர்கள் கோரிக்கையான, மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, இனியாவது, இது போன்ற முறைகேடுகளையும் குளறுபடிகளையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story