தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் தவித்த அகதிகள்


தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் தவித்த அகதிகள்
x
தினத்தந்தி 6 May 2023 6:45 PM GMT (Updated: 6 May 2023 6:46 PM GMT)

இலங்கையில் இருந்து படகு மூலம் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் கைக்குழந்தை உள்பட 10 அகதிகள் தவித்தனர். அவர்களை மீனவர்கள் உதவியுடன் கடலோர போலீசார் மீட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து படகு மூலம் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் கைக்குழந்தை உள்பட 10 அகதிகள் தவித்தனர். அவர்களை மீனவர்கள் உதவியுடன் கடலோர போலீசார் மீட்டனர்.

நடுக்கடலில் தவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை, ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடிக்கு 200-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டு பகுதியில் அகதிகள் சிலர் குழந்தைகளுடன் தவிப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் வந்தது.

ராமேசுவரம் கடலோர போலீசார் நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த சிறுவர்-சிறுமி, கைக்குழந்தை, பெண்கள் உள்பட மொத்தம் 10 பேரை மீட்டு, அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றி 10 அகதிகளையும் மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

தீவிர விசாரணை

மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசாரும், கடலோர போலீசாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாருஜன்(வயது 23), இவருடைய மனைவி அம்பிகா(22), இவர்களுடைய ஒரு வயது ஆண் குழந்தை ஜான் அட்ரியன், மற்றொரு குடும்பத்தை சேர்ந்த சசிகுமார்(43), இவருடைய மனைவி கலைச்செல்வி(38), இவர்களுடைய பிள்ளைகள் ரஜிதன்(17), அபிஷாக் எஸ்ரேன்(5), மற்றொரு குடும்பத்தை சேர்ந்த அகினேசுவரி(75), இவருடைய மகள் யானுஜா(32), பேத்தி ஸ்லியா(9) ஆகியோர் என்பது தெரியவந்தது.

காரணம் என்ன?

இலங்கையில் இருந்து அகதியாக தப்பி வந்தது குறித்து அம்பிகா கூறியதாவது:-

இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. குழந்தைகளுக்கான பால்பவுடர் ஒரு டப்பா ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. எந்த சிகிச்சைக்கு சென்றாலும் மருந்துகள் இல்லை என கூறி விடுகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிக்குதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சென்றால் அதிக கட்டணம் கேட்கிறார்கள், என்று கூறினார்.

கடும் குளிரில் தவிப்பு

கலைச்செல்வி கூறும்போது, "அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தாலும் விலை உயர்வால் அதிக சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் படகில் ஏறி தப்பி வந்தோம். எங்களை படகில் அழைத்து வந்தவர்கள், நள்ளிரவில் தனுஷ்கோடி அருகே மணல் திட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

காலையில் விடிந்து பார்த்தபோதுதான் அது நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டு என்பது எங்களுக்கு தெரியும். இரவு முழுவதும் கடும் குளிரில் குழந்தைகளுடன் தவித்தோம். எங்கள். வீடுகளில் இருந்த பொருட்களை விற்று அதில் கிடைத்த பணத்தை படகோட்டிக்கு கொடுத்து வந்துள்ளோம்" என்று கூறினார்.

போலீசாரின் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story