'இந்துக்களை திருப்திப்படுத்த இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்துக்களை திருப்திப்படுத்த இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 2 May 2023 3:16 AM GMT (Updated: 2 May 2023 4:37 AM GMT)

இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'உங்களில் ஒருவன்' மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது இந்து மக்களை திருப்திபடுத்தும் என பாஜக தலைமை கருதுகிறது. அவ்வாறு செய்தால் இந்துக்கள் மகிழ்வார்கள் என பாஜக நினைக்கிறது. பேச்சின் மூலம் சிறுபான்மையின மக்களின் மீதான வன்மம்தான் வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா பேசியுள்ளார்.

பாஜகவிற்கு வாக்களிக்காத மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் தான். பொய்களையும், வெறுப்புகளையும், மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க சமூக வலைதளங்களை பாஜக பயன்படுத்துகிறது.

மதச்சார்பின்மையை அரசியலமைப்பாக கொண்ட தமிழ்நாட்டில் உள்துறை மந்திரியே இப்படி பேசுவது அரசியலமைப்பை மீறுவது ஆகும். கர்நாடகா, தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்வோம் என்ற உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் பேசுகையில்,

அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் குறித்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும். அதிமுகவின் ஊழல் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து சிஏஜி அறிக்கை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி, இசைவாணை ஆகியவற்றை பெற வேண்டியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மீதான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும். உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்; அது உறுதி. மனசாட்சியே நீதிபதி என்ற கலைஞரின் சொற்களுக்கு ஏற்ப நான் செயல்பட்டு வருகின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story