முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்


முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் -அண்ணாமலை வலியுறுத்தல்
x

10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக விலையேற்றம் ஒன்றை மட்டும் 3 மாத இடைவெளியில் பரிசாக வழங்கி வருகிறது. சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை தொடர்ந்து நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதமும், முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கும் உயர்த்தியுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க.வினர், அவர்களது உற்றார் மற்றும் உறவினர்கள் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் சந்தை விலையை பல மடங்கு கூட்டி சாமானிய மனிதர்கள் வீட்டுமனை வாங்கும் திட்டத்தை கைவிடும்படி செய்துள்ளனர். இது போதாதென்று தற்போது இருக்கும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.

கடந்த மாதம் 30-ந்தேதி பதிவுத்துறை தலைவர் அனுப்பிய சுற்றறிக்கைப்படி, தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலத்தின் வழிகாட்டி மதிப்பை கண்டறிய ஒரு குழு அமைத்ததாகவும், அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க தாமதம் ஆவதால் 2017-ம் ஆண்டு குறைக்கப்பட்ட சதவீத மதிப்பை அடிப்படையாக கொண்டு தற்போது உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விட 33 சதவீதம் உயர்த்தியுள்ளது சந்தேகங்களை எழுப்புகிறது. அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை விட சந்தை விலை குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாகவே தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. தற்போது உயர்த்தப்பட்ட 33 சதவீத வழிகாட்டி மதிப்பினால் சந்தை விலை மேலும் கூடி, சாமானிய மனிதர்கள் நிலம், வீட்டுமனை அல்லது வீடு வாங்கும் திட்டத்தை முழுவதுமாக முடக்கிவிடும்.

திரும்ப பெற வேண்டும்

2022-23 நிதி ஆண்டில் பத்திரப்பதிவுத்துறை ஈட்டிய மொத்த வருவாய் ரூ.17 ஆயிரத்து 297 கோடி. அதற்கு முந்தைய ஆண்டை விட 24.3 சதவீதம் அதிகம். இவ்வாறு இருக்கும்போது, முத்திரைத்தாள் கட்டணத்தையும், நிலத்தின் வழிகாட்டி மதிப்பையும் எதற்காக பன்மடங்கு உயர்த்தவேண்டும்? அரசின் திட்டங்களை செயல்படுத்த கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மட்டும் இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வு சென்றால் நிலத்தை இழந்த மக்கள் பயன்அடைவார்கள். ஆனால், தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் ஒதுக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத்துக்கு உட்பட்ட மற்றும் சுற்றியுள்ள நிலங்களை சமீபகாலமாக பலர் வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் கூட்டியதால் சமீபத்தில் நிலம் வாங்கியோர் பல கோடி லாபம் அடைவார்கள். இதில் தமிழக அரசு கவனமாக இருக்கவேண்டும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் இனி சந்தை விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதால், அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டுமே இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பயன்படுத்தவேண்டும். மேலும் அறிவிக்கப்பட்ட 10 மடங்கு முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story