பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.25½ லட்சம் மோசடி


பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.25½ லட்சம் மோசடி
x

பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.25½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி காஜா நகர் அப்துல் கபூர் பகுதியை சேர்ந்தவர் பஜூலூர் ரகுமான். இவர் திருச்சி பாரதியார் சாலை பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் சாகுல் ஹமீது என்பவருடன் சேர்ந்து திருச்சி காட்டூர் வின் நகர் பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 46) என்பவரிடம் தங்களது பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பங்குதாரராக சேர்வதற்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதனை நம்பிய நாகப்பன் பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து நீண்ட நாட்களாகியும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் இதே காரணத்திற்காக பலரிடம் பணம் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பஜூலூர் ரகுமானிடம் கேட்டபோது, கடந்த 2019-ம் ஆண்டு 1.5 சதவீத வட்டியுடன் பணத்தை தருவதாக ஒப்பந்த பத்திரம் ஒன்று கொடுத்துள்ளார். அதன்படி மீண்டும் கடந்த 2020-ம் ஆண்டு வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சத்து 57 ஆயிரத்து 500-ஐ கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. மேலும் நாகப்பனை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகப்பன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சாகுல் ஹமீது, பஜூலூர் ரகுமான், ஹபிபுர் ரகுமான் மற்றும் ஒருவர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story