மல்லூரில் ரூ.200-க்கு ஆசைப்பட்டு ரூ.4 லட்சத்தை பறிகொடுத்த பூ வியாபாரி


மல்லூரில் ரூ.200-க்கு ஆசைப்பட்டு ரூ.4 லட்சத்தை பறிகொடுத்த பூ வியாபாரி
x

மல்லூரில் பூ வியாபாரியிடம் ரூ.200-யை போட்டு ரூ.4 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

மல்லூரில் பூ வியாபாரியிடம் ரூ.200-யை போட்டு ரூ.4 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூ வியாபாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குட்லாடம்பட்டி கிராமம் வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 51). பூ வியாபாரி. இவர் விவசாயிகளிடம் பூக்களை நேரடியாக வாங்கி அவற்றை கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பூபதி, மல்லூரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வழியில் நின்று செல்போன் பேசியுள்ளார்.

ரூ.4 லட்சம் பறிப்பு

இதனிடையே அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உங்களது பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் கீழே விழுந்துள்ளது, எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து பூபதி அந்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு மல்லூரில் உள்ள காபி பார் ஒன்றில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம், பையுடன் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

200 ரூபாயை கீழே போட்டு விட்டு, அவரது பாக்கெட்டில் இருந்து தவறி விழுந்ததாக கூறி பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ.4 லட்சத்தை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story