ராமநாதபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ராமநாதபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

ராமநாதபுரம்


பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

ஆடுகள் விற்பனை

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, ஆடி மாதம், பக்ரீத், ரமலான் சமயங்களில் ஆடு விற்பனை அதிகஅளவில் நடப்பது வழக்கம். பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கூட்டம் கூட்டமாக ராமநாதபுரம் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வாங்கி செல்வது நடந்து வருகிறது.

இதேபோல, இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுப்பது வழக்கம். இதற்காக முஸ்லிம்கள் அனைவரும் ஆடுகளை அதிகஅளவில் வாங்கிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும்.

அதிக விலை

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று வாரச்சந்தையான புதன்கிழமையன்று ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலையிலேயே ஆடுகளை வளர்ப்ப வர்கள் தங்களின் ஆடுகள் மற்றும் மாடுகளை அதிகஅளவில் ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் ஆட்டு வியாபாரிகள் இந்த ஆடுகளை போட்டி போட்டு காலை முதலே வாங்க தொடங்கினர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சம் காரணமாக ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகஅளவில் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட உற்சாகமாக காணப்பட்டது.

ஆடுகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக செம்மறி ஆடுகளைவிட வெள்ளாடுகள் அதிகவிலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக நேற்று ஒருநாளில் ராமநாதபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.

விற்று தீர்ந்தன

இந்த ஆட்டுச்சந்தையில் வாங்கிய ஆடுகளை சரக்கு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வைத்து கொண்டு சென்றதை காணமுடிந்தது. அதிகாலையில் தொடங்கிய ஆட்டுச்சந்தை காலை 11 மணிக்கு முன்னதாகவே அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்தது.


Next Story