ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனியார் உணவகத்திற்கு 'சீல்'


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனியார் உணவகத்திற்கு சீல்
x

உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் செயல்பட்ட தனியார் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் செயல்பட்ட தனியார் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

4 பேருக்கு வாந்தி, மயக்கம்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் உணவருந்த வசதியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் உணவகமும் நடத்தப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் உணவகத்தில் உணவருந்திய 4 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மேயர் நடவடிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல்நலம் விசாரித்தார். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை நடத்தினர். உணவகத்தில் சமைத்து வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் கூறியிருந்தார்.

பூட்டி 'சீல்' வைப்பு

இந்தநிைலயில் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி நல அதிகாரி ஜாண் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, தியாகராஜன், ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ஆல்ட்ரின், வருவாய் உதவியாளர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் சம்பந்தப்பட்ட உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் அந்த உணவகத்தில் உணவு தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தை பூட்டி 'சீல்' வைத்தனர். அங்கு சமைத்து வைக்கப்பட்டு இருந்த மதிய உணவு வகைகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story