கொடைக்கானலில் கருவாடு கூடைக்குள் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்


கொடைக்கானலில் கருவாடு கூடைக்குள் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கொடைக்கானலில் கருவாடு கூடைக்குள் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசாரும் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆனந்தகிரி 2-வது தெருவில் ஒருவர் மோட்டார் சைக்களில் கருவாடு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த கருவாடு கூடையை சோதனை செய்தனர். அதில், 18 கிலோ புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிடிபட்ட கருவாடு வியாபாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் நாயுடுபுரம், அட்டுவம்பட்டி, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story