பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்களில் 201 மனுக்களுக்கு தீர்வு


பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்களில் 201 மனுக்களுக்கு தீர்வு
x

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்களில் 201 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தாலுகாவிற்கு வடக்கு மாதவி கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூரிலும், குன்னம் தாலுகாவில் பரவாயிலும் (கிழக்கு), ஆலத்தூர் தாலுகாவில் திம்மூரிலும் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் தாலுகாவிற்கு சின்னப்பட்டாகாடு கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் கீழக்குடியிருப்பிலும், செந்துறை தாலுகாவில் ஆதனக்குறிச்சியிலும், ஆண்டிமடம் தாலுகாவில் விளந்தையிலும் (தெற்கு) பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. கூட்டத்தினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்தினார்கள். இதில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடத்தப்பட்டதை அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 86 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மொத்தம் 117 மனுக்களில், 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மாவட்டங்களில் அடுத்த பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி நடைபெறவுள்ளது. முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


Next Story