மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

போக்சோ வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 44), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனநலம் பாதித்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அவரது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் வெளியில் சொல்லாமல் இருக்குமாறு சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கருப்பசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் கருப்பசாமிக்கு போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மேலும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2½ லட்சம் வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

திருச்சி சிறை

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை கருப்பசாமி அனுபவிக்க உள்ளார். இதையடுத்து கருப்பசாமியை போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.


Next Story