பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் கைது


பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் கைது
x

திருவாரூர் அருகே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 24 வயதான பெண் ஒருவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக தஞ்சைக்கு சென்றுவிட்டு இரவு பஸ்சில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவருடன் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் சற்குணம் (வயது 32) என்பவர் அந்த பெண் போலீசை செல்போனில் தொடர்பு கொண்டு கொரடாச்சேரி பஸ் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை

தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் அழைத்து செல்வதாக கூறியதால், அந்த பெண் போலீஸ் கொரடாச்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். பின்னர் அவர் சற்குணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தண்டலை கிராமம் அருகே சென்றபோது பெண் போலீசுக்கு சற்குணம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ், சற்குணத்திடம் இருந்து தப்பித்து அவருடன் பணிபுரியும் போலீஸ்காரரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

பணியிடை நீக்கம்

மேலும் அவர், இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் பெண் போலீசுக்கு சற்குணம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

போலீஸ்காரர் கைது

இதுகுறித்து போலீசார் சற்குணம் மீது பெண்ணை துன்புறுத்துதல், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தல், பெண்ணை தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story