கோவில் கொடை விழாவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நெல்லை அருகே கோவில் கொடை விழாவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பேட்டை:
நெல்லை அருகே, கோவில் கொடை விழாவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கொடை விழா
நெல்லை அருகே சுத்தமல்லி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு சுத்தமல்லி விலக்கு வ.உ.சி. நகரில் நடந்த முத்தாரம்மன் கோவில் கொடை விழாவிற்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுத்தமல்லி கோவில்பத்து தெருவை சேர்ந்த பாண்டி மகன் மாயாண்டி (42) மது குடிப்பதற்கு கிளாஸ் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அரிவாள் வெட்டு
தகராறு முற்றவே மாயாண்டி அரிவாளால் ஆனந்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார்.