சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காகவைகை அணையில் தண்ணீர் திறப்பு


சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காகவைகை அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Dec 2022 6:45 PM GMT (Updated: 29 Dec 2022 6:46 PM GMT)

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து ஒரு வாரத்திற்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி மொத்தம் 1,533 மில்லியன் கனஅடி தண்ணீரை 7 நாட்களில் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 64.27 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,029 கன அடியாகவும் இருந்தது.

தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் முன்பு உள்ள இரு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தரைப்பாலத்தில் இறங்க பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்கிடையே தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை போதுமான அளவு பெய்யாததால் நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது.

குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story