தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

தேய்பிறை அஷ்டமியையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

தேய்பிறை அஷ்டமியையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வன்மீகநாதர் கோவில்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீயாத்தமங்கை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தகட்டூர் பைரவர்

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீலாயதாட்சியம்மன் கோவில்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ சாமி கோவில் அஷ்ட பைரவர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story