காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்


காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
x

காணும் பொங்கலை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூர்

விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடிய பொதுமக்கள் நேற்று காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அந்தந்த தெருவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர், இளம்பெண்கள், திருமணமான ஆண்கள், பெண்கள், முதியோர்கள் உற்சாகத்துடன் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசளிப்பு

இளவட்டக்கல்லை தூக்குதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கபடி, மோட்டார் சைக்கிள், சைக்கிளை மெதுவாக ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் இளைஞர்களுக்கு நடத்தப்பட்டன. கோலப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல், ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகள் இளம்பெண்களுக்கு நடத்தப்பட்டன. சாக்கு போட்டி, கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடுதல், ஒட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட எளிதான போட்டிகள் சிறுவர்- சிறுமிகளுக்காக நடத்தப்பட்டன. மேலும் மாலையில் பாட்டு போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த நற்பணி மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மேல தெருவில் உள்ள படை பத்து மாரியம்மன் கோவில் விளையாட்டு மைதானம், மின்நகர் ஆகிய இடங்களில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story