ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்


ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்
x
தினத்தந்தி 16 Aug 2023 9:30 PM GMT (Updated: 16 Aug 2023 9:31 PM GMT)

தொடர்மழை காரணமாக அம்மையநாயக்கனூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூரில் ரெயில்வே சுரங்கபாதை உள்ளது. இதன் வழியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அம்மையநாயக்கனூரில் மழை பெய்தால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி கடந்த சில தினங்களாக அப்பகுதியில் தொடர்மழை பெய்தது.

இதன் எதிரொலியாக, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. சுமார் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார்கள் நீந்தி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மையநாயக்கனூரை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில சமயத்தில் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் சிக்கி பழுதடைந்து விடுகின்றன.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் அவ்வப்போது வெளியேற்றி வருகின்றனர். ஆனால் மழைக்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகி விட்டது. எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story