குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் வீடு முன்பு விஷம் குடித்த தொழிலாளி சாவு-போலீசார் விசாரணை


குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் வீடு முன்பு விஷம் குடித்த தொழிலாளி சாவு-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி வீட்டின் முன்பு, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த ஜோதி (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி கணவருடன் கோபித்து கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

விஷம் குடித்து சாவு

இதனால் மணிகண்டன் குடும்பம் நடத்த வருமாறு ஜோதியை அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன், ஜோதியின் வீட்டுக்கு சென்றார். அவர் குடும்பம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் ஜோதி வர மறுத்ததால் மனவேதனை அடைந்து, தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை மணிகண்டன் குடித்தார்.

மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story