டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.1½ லட்சம் பறிப்பு


டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.1½ லட்சம் பறிப்பு
x

விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ.1½ லட்சம் பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே நடியப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விருத்தாசலத்தை சேர்ந்த அசோகன் (வயது 51) என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர், பணி முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு மதுபாட்டில்கள் விற்ற வகையில் வசூலான ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

புதுப்பேட்டை அருகே சென்றபோது, அங்கு நின்ற மர்மநபர்கள் 2 பேர் அசோகனை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அசோகனை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து அசோகன் திருடன், திருடன் என கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகினர்.

வலைவீச்சு

இதனிடையே மர்மநபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசாகன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறித்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story