மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது
![மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/10/23/938710-man.webp)
மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் ஹரிஷ் மனைவி தங்கமயில் (வயது 41). இவருடைய தந்தை கலியமூர்த்தி திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிசெய்து கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையத்தை சேர்ந்த சங்கரன் (51) என்பவர் பழக்கமானார். இவர் கடந்த 22.3.2019 அன்று கலியமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவரிடம், தற்போது மின்சார வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் வேலை காலிப்பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலருடன் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக தங்களுக்கு கீழ் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு மின்வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு வேலை வாங்கித்தருவதாகவும், இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
ரூ.70 லட்சம் மோசடி
இதை நம்பிய கலியமூர்த்தி மற்றும் அவரது கீழ் பணிபுரியும் 40 பேரிடம் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதமும், 18 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதமும் ஆக மொத்தம் ரூ.94 லட்சத்து 50 ஆயிரத்தை சங்கரன் பெற்றார். ஆனால் பல மாதங்களாகியும் சங்கரன், வேலை ஏதும் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு கலியமூர்த்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு சங்கரன், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை வந்துவிடும் என்று கூறினார். ஆனால் வேலை ஏதும் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் 22.2.2021 அன்று மின்சார வாரியத்தில் இருந்த காலிப்பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டதை அறிந்த மேற்கண்ட நபர்கள், சங்கரனிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி பிரச்சினை செய்தனர். அதன் பின்னர் பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் சங்கரன் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.70 லட்சத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
அரசு பள்ளி ஆசிரியர் கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் சங்கரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சங்கரன் தற்போது சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.