தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x

தற்கொலை

ஈரோடு

அந்தியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

அந்தியூர் அருகே உள்ள நஞ்சமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). விவசாயி. இவருடைய மனைவி வளர்மதி (44). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் சத்யா (18). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

இதேபோல் அந்தியூர் அருகே உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (44) லாரி மற்றும் கார் வைத்து சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் என்ஜினீயரிங் கல்லூரி படித்து வருகிறார்.

தற்கொலை

கடந்த சில ஆண்டுகளாக குருசாமிக்கும், வளர்மதிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு குருசாமியும், வளர்மதியும் கேரளா சென்றுவிட்டனர். இதனால் நடராஜன் வீட்டுக்கு நேற்று முன்தினம் குருசாமியின் மனைவி ராசாத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் அங்கிருந்த நடராஜனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதை நடராஜனின் மகள் சத்யா தட்டி கேட்டு உள்ளார். இதனால் அவரையும் ராசாத்தி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சத்யா மனமுடைந்து வீட்டுக்குள் சென்று மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

சாலை மறியல்

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தற்கொைல செய்து கொண்ட சத்யாவின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அந்தியூர்- பர்கூர் ரோட்டில் நேற்று மாலை 3.30 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. எனினும் அதைப்பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'சத்யா தற்கொலைக்கு காரணமான ராசாத்தியை கைது செய்ய வேண்டும்,' என்றனர்.

அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ராசாத்தியை போலீசார் கைது செய்தனர்.


Next Story