இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை; கணவருக்கு வலைவீச்சு


இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை; கணவருக்கு வலைவீச்சு
x

நெல்லை அருகே இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

மானூர்:

நெல்லை அருகே இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் ராமலட்சுமி (வயது 35). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கல்யாணசுந்தரம் (39) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கார் மெக்கானிக்கான கல்யாண சுந்தரம் தனது குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒர்க்‌ஷாப் வைத்து தொழில் செய்து வருகிறார். ராமலட்சுமியும் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

நடத்தையில் சந்தேகம்

கல்யாண சுந்தரம் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அறிந்த ராமலட்சுமியின் தந்தை பாலகிருஷ்ணன் திருப்பூருக்கு சென்று அங்குள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால், தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலகிருஷ்ணன் தனது மகள் ராமலட்சுமி, பேரன், பேத்திகளை தானே பார்த்துக் கொள்வதாக கல்யாண சுந்தரத்திடம் கூறினார்.

வீட்டில் தனியாக இருந்தார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமலட்சுமி தனது மகன், மகளுடன் தனது தந்தை வீட்டிற்கு வந்தார்.

நேற்று காலையில் பாலகிருஷ்ணன் தனது பலசரக்கு கடைக்கு சென்றுவிட்டார். பிள்ளைகள் அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றுவிட்டனர். இதனால் ராமலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து வந்த கல்யாண சுந்தரம் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கல்யாண சுந்தரம் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ராமலட்சுமி முகம், இருகால்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கல்யாண சுந்தரம் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

குழந்தைகள் கதறல்

பின்னர் வீட்டிற்கு வந்த பிள்ளைகள் தங்களது தாய் இறந்து கிடப்பதை பாா்த்து அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து மானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாைழயூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ராமலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனிப்படை

மேலும், சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராமலட்சுமி உடல் கிடந்த பகுதியில் ஒரு ஜோடி செருப்பு கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றினர். அந்த செருப்பு தங்களின் தந்தை கல்யாண சுந்தரத்திற்குரியது என்று குழந்தைகள் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கல்யாண சுந்தரத்தை தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகிறார்கள்.

நெல்லை அருகே இளம்பெண்ணை அவரது கணவரே வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story