கோவில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்து கேட்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கோவில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்து கேட்க வேண்டும் -  சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்து கேட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்குகள், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன். பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட அளவில் குழுக்கள் நியமிக்கப்படும் பணிகள் நடைபெறுகின்றன. 34 மாவட்டங்களில் இப்பணிகள் நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்யும் நடைமுறையை முடிக்க, 12 மாத அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள 560 கோவில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும். அவ்வாறு, இதுவரை 8 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "அரசியல் சார்பற்றவர்களை அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்ட போதும், அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில், அரசியல் சார்பு குறித்த எந்த கேள்வியும் இடம்பெறவில்லை. இது ஐகோர்ட்டு உத்தரவை மீறிய செயல்" என்று கூறினார்.

இதையடுத்து, "அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அரசியல் கட்சி உறுப்பினரா? இல்லையா ? என்ற கேள்வி இடம்பெறும்" என்று அறநிலையத் துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வாக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.


Next Story