தர்மபுரியில்போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ரூ.4.91 லட்சத்துக்கு ஏலம்
தர்மபுரி மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை ஏல முறையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான ஏலம் நேற்று காலை தர்மபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 இருசக்கர வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனையாகின. இதேபோல் 4 சக்கர வாகனங்களில் 5 வாகனங்கள் மட்டும் விற்பனையாகின. இந்த 15 வாகனங்களையும் ஏல முறையில் விற்பனை செய்ததன் மூலம் ஜி.எஸ்.டி. உட்பட ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 108 வசூல் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி, வெங்கடாஜலம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.