தனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம் - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்...!


தனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம் - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்...!
x
தினத்தந்தி 6 Aug 2022 11:40 AM GMT (Updated: 6 Aug 2022 11:40 AM GMT)

தனுஷ்கோடி பகுதியில் 4-வது நாளாக தொடரும் கடல் சீற்றம். ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. அதுபோல் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல் ராமேசுவரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக இன்று பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது.

இதேபோன்று தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் பயங்கர சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையானது பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து வருகின்றன.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி துறைமுகப் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இன்று வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு துறைமுக பகுதிக்குள் உள்ளே சென்று பல அடி உயரத்திற்கு சீறி எழுந்த கடல் அலையை மிக அருகில் நின்று செல்பி எடுத்தபடி ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் துறைமுக பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story