தேர்தல் ஆணையத்தின் 6 சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


தேர்தல் ஆணையத்தின் 6 சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 6 சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்பது உள்பட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர்திருத்தங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

''ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதை தடை செய்தல், தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்தல்,கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான அதிகாரம், ரூ.2000-த்திற்கும் கூடுதலாக பெற்ற அனைத்து நன்கொடைகளையும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பதை கட்டாயமாக்குதல்'' போன்ற சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் நடைமுறை செய்ய பரிந்துரைத்துள்ளது.

குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர். எனவே, கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர்திருத்தங்களையும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story