சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது


சென்னை விமான நிலையத்தில்  உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது
x

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டநெரிசலை குறைக்க உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் கடந்த 7-ந் தேதி முதல் முழு அளவில் இயங்க தொடங்கியது.

இதனால் ஏற்கனவே பன்னாட்டு விமான முனையமாக செயல்பட்டு வந்த பகுதிகள் முழுமையாக மூடப்பட்டது. பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த பன்னாட்டு வருகை முனையம் அடுத்த சில வாரங்களில் இடிக்கும் பணி தொடங்கும். கட்டிடம் இடிக்கும் பணி முடிந்ததும் சென்னை விமான நிலைய 2-ம் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

தற்போது சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த இந்திய விமான ஆணையம் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விமான நிலையத்தில் தற்போது மூடப்பட்டு உள்ள பன்னாட்டு முனையங்களை புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் செப்டம்பர் மாதத்தில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதல் உள்நாட்டு முனையமாக உள்ள முனையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் 2-வது உள்நாட்டு முனையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதால் சென்னையில் இருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும். பயணிகளுக்கும் தாராளமாக இடவசதி கிடைக்கும். விமான நிலையத்தில் நெரிசல்கள் குறையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story