வீடு புகுந்து இளம்பெண்ணை காரில் தூக்கிச்சென்ற கும்பல்: 7 பேர் கைது


வீடு புகுந்து இளம்பெண்ணை காரில் தூக்கிச்சென்ற கும்பல்: 7 பேர் கைது
x

சினிமா காட்சிபோல் வீடு புகுந்து இளம்பெண்ணை ஒரு கும்பல் தூக்கிச்சென்றது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (வயது 32). இவர் மயிலாடுதுறை மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி பெண் ஒருவருடன் பழகி உள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

அதன்பிறகு விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார். ஆனாலும், அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததுடன், அவரை காதலிப்பதாக கூறி வீட்டுக்கு சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அந்த பெண் வீட்டார் மயிலாடுதுறை போலீசில் 2 முறை புகார் அளித்துள்ளனர்.

காரில் தூக்கி சென்றனர்

போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி உள்ளனர். இந்தநிலையில், கடந்த மாதம் 12-ந் தேதி விக்னேஸ்வரன் அந்த பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பித்த அந்த இளம்பெண் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சிலர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, வலுக்கட்டாயமாக பெண்ணை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து, அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கடத்தல் கும்பலை தீவிரமாக தேடினர்.

விக்கிரவாண்டியில் பிடிபட்டனர்

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்க சாவடியில் ஒரு பெண்ணுடன் 3 பேர் காரில் சென்றதை கண்ட போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். இதில் மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட பெண் காரில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண் மற்றும் காரில் வந்த 3 பேரையும் போலீசார் பிடித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி கிடைத்த தகவலின்பேரில் மயிலாடுதுறை போலீசார் அங்கு சென்று கடத்தப்பட்ட பெண்ணுடன், பிடிபட்ட 3 பேரையும் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

7 பேர் கைது

விசாரணையில் அவர்கள் விக்னேஸ்வரன், மயிலாடுதுறை சேந்தங்குடியை சேர்ந்த மணிவேல் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (35), விழுப்புரம் பில்லூரை சேர்ந்த ஜெயபால் மகன் செல்வகுமார் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பெண்ணை பலவந்தமாக கடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தநிலையில், சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 12 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சினிமா படக்காட்சியை மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த கடத்தல் சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story