வியாபாரி மர்ம சாவு


வியாபாரி மர்ம சாவு
x
தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:45 PM GMT)

பண்ருட்டி அருகே வியாபாரி மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி

வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம்

பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் வ.உ.சி. நகரை சேர்ந்த அருணாச்சலம் மகன்கள் சுரேஷ்குமார் (வயது 52), ரமேஷ்(50). அண்ணன்- தம்பி இருவரும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தனர். மேலும் இருவரும் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அருணாச்சலம் இறந்த பிறகு அண்ணன்-தம்பிக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று காலை சுரேஷ்குமாருக்கும், ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சாவில் சந்தேகம்

அப்போது சுரேஷ்குமார், ரமேசை கீழே தள்ளி விட்டு தனது மனைவி கீதா, மகன் வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மயக்கம் அடைந்த ரமேசை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரமேஷ் மகன் பிரவீன் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story