5 மாதத்துக்குள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் அமைச்சர் உறுதி


5 மாதத்துக்குள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் அமைச்சர் உறுதி
x

5 மாதத்துக்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை இன்னும் 5 மாதங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ஈரோடு வந்தார். பின்னர் அவர் கணபதிநகர், நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே பேசும்போது கூறியதாவது:-

தந்தை பெரியாரின் பேரனுக்கு, கலைஞரின் பேரன் நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெராவை 9 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெறச்செய்த நீங்கள், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

வீதியில் சண்டை

மோடியிடம் கட்சி பிரச்சினைக்காக பேச எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டிப்போட்டு ஓடிச்செல்வார்கள். எப்போதாவது மக்கள் பிரச்சினைக்காக சென்று இருக்கிறார்களா?. யோசித்து பாருங்கள். ஆட்சியில் இருந்தபோது 2 பேரும் ஒற்றுமையாக இருந்தார்கள். நீ முதல்-அமைச்சர், நான் துணை முதல் அமைச்சர், நீ ஒருங்கிணைப்பாளர், நான் துணை ஒருங்கிணைப்பாளர். இப்படித்தான் ஆட்சியை நடத்தினார்கள். ஆட்சி போன அடுத்த நிமிடம் 2 பேரும் வீதியில் நின்று சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மருத்துவமனை

கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தபோது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இதுவரை ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இதுதான் (பொட்டல் காடாக கிடக்கும் இடத்தின் படத்தை காட்டினார்). அங்கே இருந்தது ஒரே ஒரு செங்கல்தான் (செங்கல் எடுத்து மக்களிடம் காட்டினார்). அதையும் நான் எடுத்து வந்து விட்டேன். இந்த சூழலில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என்று அறிவித்து இருக்கிறார். இதுதான் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி.

ரூ.1,000 கோடி திட்டங்கள்

இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஈரோட்டுக்காக ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டங்களை தலைவர் அறிவித்து செயல்படுத்த உள்ளார்.

பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்ன என்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் அதிகபட்சம் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Next Story