இளநிலை உதவியாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


இளநிலை உதவியாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தேனியில் அரசு பெண் அதிகாரியை கொலை செய்ய முயன்ற இளநிலை உதவியாளரை குண்டர்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக போடியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி (வயது 53) பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் போடியை சேர்ந்த உமாசங்கர் (40) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இளநிலை உதவியாளராக பணியாற்றினார். பின்னர், அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக இளநிலை உதவியாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தனது பணியிட மாற்றத்துக்கு ராஜராஜேஸ்வரி தான் காரணம் என்று கருதிய உமாசங்கர் கடந்த மாதம் 30-ந்தேதி தேனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு வந்து, ராஜராஜேஸ்வரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரை கைது செய்தனர். இதையடுத்து உமாசங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமாசங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story