குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீயில் மரங்கள் கருகின
குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீயில் மரங்கள் கருகின
துறையூர், மே.24-
துறையூரில் முசிறி ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் மற்றும் சென்னை செல்வதற்கு புற வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறவழிச் சாலையோரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேப்பமரம், புளியமரம், புங்கன் மரம் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை பொதுப்பணித்துறையினர் நட்டு பராமரித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் இருந்து தினமும் இலைகள் மற்றும் கழிவுநீர், குப்பைகள் ஆகியவற்றை புறவழிச்சாலையோரத்தில் கொட்டி, மலை போல் குவித்து வைக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு புறவழிச்சாலையோரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, அப்பகுதியில் உள்ள மரங்களுக்கு இடையில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். இதனால் குப்பைகளுடன் சேர்ந்து பொதுப்பணித்துறையினர் வளர்த்து வந்த புளிய மரங்களும் தீப்பற்றி எரிந்து கருகின. இதனால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.