தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை


தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி அருகே குடிபோதை தகராறில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே குடிபோதை தகராறில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (வயது 57). கட்டிட தொழிலாளி.

அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). பெயிண்டர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது மதுபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென்று மணிகண்டனின் காலில் வெட்டினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும் சுதாரித்து கொண்ட மணிகண்டன், பெரிய மாரியப்பனிடம் இருந்த அரிவாளை பிடுங்கினார்.

பின்னர் அந்த அரிவாளால் மணிகண்டன், பெரிய மாரியப்பனின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெரிய மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்றார்.

பெயிண்டர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த பெரிய மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடினர்.

இந்த நிலையில் அங்குள்ள காட்டு பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை பிடித்து கைது செய்த போலீசார், பின்னர் அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இறந்த பெரிய மாரியப்பனுக்கு கனகலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவில்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story