உலர் கூடத்தில் 600 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு


உலர் கூடத்தில் 600 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:46 PM GMT)

குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் புகுந்து 600 கிலோ ரப்பர் ஷீட்டுகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் புகுந்து 600 கிலோ ரப்பர் ஷீட்டுகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரப்பர் உலர் கூடம்

திருவட்டார் அருகே உள்ள புத்தன்கடையைச் சேர்ந்தவர் நார்பர்ட் (வயது 54). இவர் திருநந்திக்கரையில் ரப்பர் உலர் கூடம் நடத்தி வருகிறது. இதில் ரப்பர் விவசாயிகளின் ரப்பர் ஷீட்டுகளை வாங்கி உலர்த்திக் கொடுப்பது வழக்கம். மேலும் இந்த ரப்பர் உலர் கூடத்தில் விவசாயிகள் தங்களது ரப்பர் ஷீட்டுகளை இருப்பு வைப்பதும் உண்டு.

நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் நார்பர்ட் உலர் கூடத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

ரப்பர் ஷீட்டுகள் திருட்டு

இந்தநிலையில் நேற்று காலையில் உலர் கூடத்தைத் திறக்க வந்த போது முன்பக்க கேட் மற்றும் உலர் கூட கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோ ரப்பர் ஷீட்டுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து நார்பர்ட் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரப்பர் உலர் கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

2 மர்ம ஆசாமிகள்

அதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மினி டெம்போவில் 2 மர்ம ஆசாமிகள் தலையில் ஹெட்லைட் கட்டிய நிலையில் வந்து உலர் கூடத்தில் புகுந்து ரப்பர் ஷீட்டுகளை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். ரப்பர் உலர் கூடத்தில் 600 கிலோ ரப்பர் ஷீட்டுகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

------------


Next Story