ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவை
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவை நடக்கிறது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருக்கைத்தல சேவை நடக்கிறது.

திருக்கைத்தல சேவை

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறுகிறது.

வேடுபறி நிகழ்ச்சி

மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரை உயபகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜன சேவையும் நடைபெறுகிறது.

நம்மாழ்வார் மோட்சம்

இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் 10-ந் தேதி அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 10-ம் திருநாளான 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது. அன்று இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.


Next Story