ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு


ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
x

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் வயநாடு மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் படிப்படியாக குறையத்தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் திடீரென காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரிசல்கள் கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.


Next Story