விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி


விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:45 PM GMT)

தேன்கனிக்கோட்டை பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் தக்காளிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தக்காளியை பறித்து விவசாயிகள் மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த தக்காளியை வியாபாரிகள் வாங்கி தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் 20 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனையானது.

அழுகி வீணாகும் தக்காளி

தற்போது விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட் மற்றும் சந்தைகளில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கூடை தக்காளி ரூ.100-க்கும், சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் தோட்டங்களிலேயே தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர்.

இதனால் தக்காளி பழங்கள் அழுகி வீணாகி வருகிறது. மேலும் பல விவசாயிகள் சாலையோரம் தக்காளி பழங்களை கொட்டி செல்கின்றனர். பல விவசாயிகள் தோட்டத்தில் ஆடு, மாடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.


Next Story